logo
home பலன்கள் ஜூன் 21, 2016
தீய சக்தியை தடுத்து நிறுத்தும் மீன், நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள், சாஸ்திரம் கூறும் உண்மை
article image

நிறம்

கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது என்று முன்னோர்கள் மிக அழகாக, திருஷ்டியைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளனர். வீட்டில் குப்பை சேர, சேர, துர்நாற்றம் வீசும் அது போலத்தான் கண் திருஷ்டியும், கூட கூட, பல்வேறு பிரச்சனைகள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆட்டிப்படைக்கும். 

இதுபோன் திருஷ்டிகளை போக்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை நம் முன்னோர்கள் கூறினாலும், வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள், இவ்வகை கண் திருஷ்டிகளை ஏற்றுக் கொண்டு, வளர்ப்பவர்களுக்கு பாதுகாப்பளிப்பதாக உள்ளது. இதனால்தான் அந்தக் காலத்தில் வீட்டில் அதிகமாக வளர்ப்பு பிராணிகளை வளர்க்க ஆரம்பித்தனர்.

பூனை முதற் கொண்டு யானை வரை வளர்ப்பு பிராணிகளாக முன்னோர்கள் வளர்த்ததன் காரணமும் இதுதான். கண் திருஷ்டி மட்டுமின்றி, செய்வினை, சூன்யம், துர் ஆவிகள், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் வளர்ப்பு பிராணிகளுக்கு உண்டு. மேலும் மேற்கண்ட துர் சக்திகளால் விளையும் தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தியும் வளர்ப்பு பிராணிகளிடம் உண்டு. 

ஒரு சில வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் திடீரென இறந்து விடும், இதற்கு காரணம்,  மிகவும் கொடுரமான வலிமைவாய்ந்த கெடுதலை, வளர்ப்பவருக்கு ஏற்படாமல் இருக்க, வளர்ப்பு பிராணிகள் ஏற்றுக் கொண்டு, அவை மரணத்தை தழுவும். அதாவது தன் உயிரை கொடுத்து வளர்ப்பவரை காப்பாற்றும்.

இவ்வளவு சக்தி வாய்ந்தது நாம் வளர்க்கும் பிராணிகள், இந்த வகையில் இதை பயன்படுத்தி காசு சம்பாதிக்க, தற்போது பல்வேறு பிராணிகளை வாஸ்த்து என்று பெயரிட்டு மக்களை ஏமாற்றும் வேலைகளும் நடைபெறுகிறது. அதில் குறிப்பாக வாஸ்த்து மீன் வளர்ப்பு, வாஸ்த்து என்று கூறி ஆயிரக் கணக்கில் ஒரு மீனை விற்கின்றனர். இது முற்றிலும் தவறு.

தனிப்பட்ட ஒரு விலங்கை, மீனை எந்த சாஸ்த்திரமும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஓர் அறிவு, இரண்டறிவு முதற்கொண்டு ஐந்தறிவு உள்ள மிருகங்கள் வரை அனைத்தையும் மனிதன் வளர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

வளர்ப்பு விலங்குகளால் மனிதனுக்கு ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்களை என்னவென்று நாம் அறிந்து கொள்ள நமது முன்னோர்கள் அஷ்வ லட்சணம், கஜ லட்சணம் போன்ற தனி சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். அவற்றில் மிக முக்கியமான பகுதி மனிதன் ஏன் வீட்டு விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு தரும் விளக்கங்கள் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

அந்த சாஸ்திரங்களில் நமது முன்னோர்கள் மிக முக்கியமான கருத்தொன்றை சொல்கிறார்கள், அதாவது ஒரு வீட்டுக்கு வரும் எதிர்பாராத துயரத்தை தடுப்பதற்காக அந்த தீய சக்தியை தனக்குள் வாங்கி கொண்டு வளர்ப்பு விலங்குகள் மறித்து விடும் என்று சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. மேலும் மனிதனுக்கு ஏற்படும் கண்திருஷ்டி போன்ற தோஷங்களை விலங்குகள் தனக்குள் ஈர்த்துக்கொண்டு வளர்ப்பவனுக்கு தான் துன்பபட்டாலும், அரணாக நிற்குமென்றும் சொல்லபடுகிறது.

அந்த வகையில் பார்த்தால் நமது வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துமே நமக்கு வருகின்ற துயரத்தை தான் வாங்கி கொண்டு வாழ்கின்றன அல்லது மறித்து போகின்றன. இந்த நியதிக்கு ஆனை முதல் பூனை வரை பொருந்தி வரும். அத்தோடு நாம் வீட்டில் வளர்க்கும் மீன்களும் கூட நமது கஷ்ட நஷ்டங்களை தனக்குள் ஈர்த்துகொள்ளும் என்று சொல்லபடுகிறது. அதனடிப்படையில் எந்த வகை மீனை வளர்த்தாலும் அதன் பயன் ஒன்று தான் என்பது தெளிவாக தெரிகிறது.

தற்போதைய கால கட்டத்தில் நகரமயமாகிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கிராமங்களைத் தவிர்த்து நகரத்தில் ஆடு, மாடு, குதிரை, யானை போன்றவற்றை வளர்ப்பது சாத்தியமில்லை. ஆனால் மீன் வளர்ப்பது என்பது அனைவராலும் முடியும். வாஸ்து மீன்தான் வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, எந்த வகை மீனையும் வளர்க்கலாம், குறிப்பாக வண்ண மீன்கள் பல வண்ணங்களில் வளர்க்கலாம், வளர்க்க இட வசதி இருந்தால், கூடுதலாக பூனை, நாய் போன்றவற்றையும் வளர்க்கலாம். 

இதுபோன்றவற்றை வளர்க்கும் போது மனிதர்களுக்கு கெட்ட சக்தியிலிருந்து விடுதலை கிடைப்பதுடன், வளர்ப்பு பிராணிகள் காட்டும் அன்பால் மனிதர்களுக்கு மனச் சோர்வும் நீங்கும், குழப்பமான மனநிலையில் இருக்கும் போது, குழந்தைகளுடனும், வளர்ப்பு பிராணிகளுடனும் சிறிது நேரம் விளையாடினால் மனம் தெளிவு படும் என்று பல்வேறு ஆராய்ச்சிகளும் நிருபித்துள்ளது. 

குடும்பத்தில் தொடர், பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஏதாவது ஒரு வளர்ப்பு பிராணிகளை வளர்த்துப் பாருங்கள் மிக விரைவில் தீர்வு கிடைக்கும்.


குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 

தினமும் புத்தம் புதிய செய்திகளுடன் வெளிவரும் ஒரே ஆன்மிக இணையதளம் 
            

www. aanmeegamalar.com 

எங்களை தொடர்பு கொள்ள aanmeegamalar@gmail.com