logo
home ஆன்மீகம் மார்ச் 15, 2016
திருமாலுக்குரிய நான்கு குணங்கள்
article image

நிறம்

திருமாலுக்குரிய குணங்களாகக் கூறப் பெறுவனவற்றுள் நான்கு குணங்கள் மிகச் சிறப்பாகப் போற்றப் பெறுபவை. அவை 1. வாத்சல்யம், 2. சுவாமித்துவம், 3. சௌசீல்யம், 4. சௌலப்யம் என்பனவாகும். வாத்சல்யம்: கன்றிடம் தாய்ப்பசு கொள்கிற அன்பாகும் திருமாலுக்குரிய இக்குணம் கண்ணன் அவதாரத்திலே மிகுதியாக வெளிப்படுகிறது. குசேலரிடத்திலும் பாண்டவர் மற்றும் திரௌபதியிடமும் மிகுதியாகக் காட்டினார். அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் அவனது குற்றம் நோக்காது உண்மைப் பொருளின் சிறப்பை உணர்த்திய திறத்தால் அவனுடைய வாத்சல்ய குணம் விளங்குகிறது. சுவாமித்துவம்: கடவுளர்க்கெல்லாம் தலைமைத் தன்மை உடையவனாகும் சிறப்பைக் கூறுவது. இச்சிறப்பு அனைத்து அவதாரங்களிலும் வெளிப்பட்ட போதிலும் கண்ணன் அவதாரமே அத்தகைய சிறப்புக்கு உறைவிடமாக இருக்கிறது. பகவத் கீதையை உரைக்கையில் தன்னுடைய கடவுள் தன்மையை உணரும் பொருட்டாக அர்ச்சுனனுக்கு பரத்துவத்தை விளக்கியமையால் இக்குணத்தின் சிறப்பு விளங்குகிறது. சௌசீல்யம்: ஏற்றத் தாழ்வின்றி உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி கொண்டிருக்கும் நட்பைக் குறிப்பது. இக்குணமும் கண்ணனுக்கு மிகுதியாக இருந்தது. சௌலப்யம்: இறைவனின் எளிமை நிலையைக் குறிப்பது. உலக மாயைக்குக் கட்டுண்ணாத திருமால் மனித வடிவில் வந்து தன் உடலை மக்களின் கண்களுக்கு இலக்காக்கிய நிலையே எளிமைக்கு எடுத்துக்காட்டாகும்.