logo
home ஆன்மீகம் ஜூலை 11, 2018
தியானம், பூஜை செய்யும் போதும் மனம் குவியதில் சிரமம் ஏற்படுவது ஏன்?
article image

நிறம்

தியானம் செய்யும் போதும், பூஜை செய்யும் போதும் மனம் குவியதில் சிரமம் ஏற்படுவது ஏன்? இது நம்மில் பலருக்கு தினசரி ஏற்படும் கேள்வியாகும் மாலை பொழுது கதிரவன் மேற்கிலிருந்து மஞ்சள் ஒளியால் கடற்கரை மணற்பரப்பை குளிப்பாட்டி கொண்டிருக்கிறான். சந்தன மரத்தில் கடைந்தெடுத்த பதுமை போல் அழகான மாதொருத்தி கடற்காற்றில் கூந்தலும் ஆடையும் வர்ணஜாலம் புரிய நடந்து வருகிறாள். கருங்கூந்தல் கற்றைகள் காற்றில் பிரிந்து அவள் மாம்பழ கன்னத்தில் விதவிதமான கோட்டோவியங்களை வரைகின்றது. விழிகளை மூடாமல் அவள் அழகை விழுங்கி விடுவது போல் பார்க்கிறீர்கள் அந்த ரசனையின் இன்ப வேதனை பக்கத்தில் அமர்ந்து இருக்கும் நண்பனை கூட மறக்க செய்கிறது. உங்கள் வயது, தகுதி தாரதரம் எல்லாம் மறந்து போய் விடுகிறது. காற்று அள்ளி வரும் கடற்கரை மணல் கண்களில் வீழ்ந்தால் கூட அது உருத்துவது இல்லை. வியாபாரத்தில் பல லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. கிடைத்த பணத்தை வங்கியில் போட ஒவ்வொரு நோட்டுகளாக எண்ணுகிறோம். அருகில் மனைவி வருகிறாள் கவனிக்கவில்லை. அப்பா கூப்பிடுகிறார் காதில் விழவில்லை. குழந்தை மிட்டாய் கேட்டு அழுகிறது. அதுவும் நமது கவனத்தை கவரவில்லை. மனம் முழுக்க முழுக்க பணத்தை எண்ணுவதை தவிர வேறு எதிலும் நாட்டம் கொள்ளவில்லை. பெண்ணின் அழகை ரசிப்பதிலும் பணத்தை ருசி பார்ப்பதிலும் சிந்தாமல் சிதறாமல் ஒருமைப்பாட்டுடன் இருக்கும் மனம் தியானம் என்று உடகார்ந்த உடன் ஆற்றில் நீச்சல் அடிப்பதையும், கடன்காரன் வருவதையும் நினைத்து நாலாபுறமும் சிதறி ஓடுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? நமக்கு எதில் ஆர்வமோ எதில் ஆசையோ அதில் மனது குவிகிறது. மற்றவற்றில் குவிய மறுக்கிறது. சண்டித்தனம் பண்ணுகிறது. தியானத்தை பற்றி நிறைய பேசுகிறோம். ஆனால் நமது மனம் அதை முக்கயமானதாக நம்புவது இல்லை. அதனால் அசட்டை ஏற்படுகிறது. இந்த அசட்டை தான் நமது முன்னேற்றத்திற்கு பெரிய தடையாக இருக்கிறது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் பத்து நிமிடத்தை முழுமையாக தியானத்திற்கு ஒதுக்க நம்மால் முடியவில்லை. எனவே தியானம் செய்வதற்கு மிக முக்கியமான தேவை மன ஒருமைப்பாடு அல்ல ஆர்வம் மட்டுமே ஆகும் முதலில் தியானம் செய்ய பூஜை செய்ய ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் மனம் தானாக குவியும்.